நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஈரானில் சட்டப்படி கட்டாய இராணுவச் சேவைக்காக ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில்’ (IRGC) பணியாற்றினார்கள் என்ற காரணத்தினாலேயே, அவர்கள் கனேடிய புவியியல் எல்லைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அரசாங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை‘ (IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவுத் திணைக்களம் (IRCC) கடந்த மாதம் நூற்றுக்கணக்கான ஈரானிய விண்ணப்பதாரர்களுக்கு “செயல்முறை நியாயக் கடிதங்களை” (Procedural Fairness Letters) அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள IRGC படையுடன் தொடர்பு கொண்டிருந்தமையால், அவர்கள் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (IRPA) கனடாவிற்குள் நுழைய அல்லது தங்குவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாங்கள் அந்த பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவராக இருக்கவில்லை என்பதை விண்ணப்பதாரர்களே நிரூபிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

