உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் அடிப்படையில் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடர முடியும்.
மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும் துணை முதல்வருமான பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

