திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த திடீர் கனமழையால், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் நீர் திறக்கப்படாத சூழலில், நிலத்தடி நீரை நம்பியும் பெரும் கடன் வாங்கியும் சாகுபடி செய்த விவசாயிகள், தற்போது அறுவடை நேரத்தில் பெய்த எதிர்பாராத மழையால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பது அரசின் தலையாய கடமையாகும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்க விரும்புவதாகக் கூறும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளின் வாழ்வைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாகப் பாதிப்பு ஏற்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும் என்றும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வீதம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

