ஆசியப் பகுதியில் அடுத்தடுத்து உருவாகிய புயல்களின் தாக்கத்தால் ஆகஸ்ட் மாத சராசரியை விட மூன்று மடங்கு அதிகமான அசாத்திய கனமழை ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில் கொட்டித் தீர்த்துள்ளது.
ஒரே மணி நேரத்தில் சுமார் 115 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ள இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் மூழ்கிய காருக்குள் சிக்கியும், வீதிகளில் ஏற்பட்ட திடீர் நீர்வரத்தில் அடித்து செல்லப்பட்டும் இந்த உயிர்சேதங்கள் நிகழ்ந்துள்ளன.
கனமழையின் காரணமாக மின் கம்பங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்து 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் இரயில் போக்குவரத்து மற்றும் பிரதான நெடுஞ்சாலைகள் முற்றிலும் ஸ்தம்பித்ததால், நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் தங்கியிருக்க நேரிட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்தனர். தற்போது மழை சற்று குறைந்திருந்தாலும் நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால், உள்ளூர் நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

