வடக்கு மாகாணத்தில் பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிதிப்பங்களிப்பில் எதிலிகளுக்கான மறுவாழ்வு மையம் இலங்கையின் ஏற்பாட்டில் ஊடக மாநாடொன்று யாழ். அரியாலையில் தனியார் விருந்தினர் விடுதி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூகத்தின் சமமான வளர்ச்சிக்கும், பெண்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது என்ற கருத்தை வலியறுத்தும் வகையில் குறித்த மாநாடு அமைந்திருந்தது.
மாநாட்டின் முதன்மை நோக்கங்களாக பெண்களை அரசியல் மற்றும் சமூகத்தில் முடிவெடுக்கும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துதல், பெண்களின் குரலை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், பெண்களின் அரசியல் விழிப்புணர்வை அதிகரித்தல், பொதுவெளியில் பேசுவதற்கான திறன் வளர்ச்சி மற்றும் சுயநம்பிக்கையை மேம்படுத்துதல், சட்டங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு முறைகள் குறித்து பெண் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை முதன்மை நோக்கங்களாக கொண்டு குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பெண்களின் அரசியல் பிரவேசத்திற்குத் தடையாக உள்ள சவால்களும் இதன்போது விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டன.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்மை, சமூகக் கட்டுப்பாடுகள், போதிய வழிகாட்டல் இன்மையால் ஏற்படும் தடைகள் மற்றும் அரசியல் களம் குறித்த தயக்கங்கள் போன்ற காரணிகள் குறித்து ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவபடுத்தும், பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

