முழு நாட்டையும் அழகு படுத்தும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (8) ஆரம்பமாகியுள்ளது. ஒன்றாக இணைவோம் சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (8) காலை 8.30 மணி அளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலை சூழலை முழுமையாக சுத்தப் படுத்துகின்ற குறித்த வேலைத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் வைத்தியசாலை பணியாளர்கள்,கிளீன் சிறிலங்கா வேலைத்திட்ட பணியாளர்கள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படையினர் இணைந்து குறித்த வேளைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தை நாங்கள் தூய்மையாக வைத்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலும், கூட்டாக இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

