வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா, டெல்லியில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், அவாமி லீக் முன்னாள் எம்பியுமான சாகிப் அல் ஹசனும் கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களிலேயே, மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் மூதாதையர் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 8:45 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஷகிப் அல் ஹசனின் இல்லம் பலத்த சேதமடைந்தது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவாமி லீக் கட்சி, “பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பாசிசம் சூழ்ந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், பிஎன்பி, இஸ்லாமிய ஜமாத் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஜனநாயக கட்டமைப்பு என்ற பெயரில் அவாமி லீக் ஆதரவாளர்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக காணொளி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, சிறை தண்டனை அல்லது உயிரிழப்பு போன்ற எந்தவொரு ஆபத்துக்கள் வந்தாலும், நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்காக உழைக்கவும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக உறுதியளித்தார். இத்தகைய சூழலில், ஷகிப் அல் ஹசனின் இல்லத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

