கோர்டி ஹோவ் சர்வதேச பாலத்தின் (Gordie Howe International Bridge) வருவாய் பகிர்வு ஒப்பந்தம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த முன்மொழிவை, கனடாவின் ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழுவில் வாக்கெடுப்பு இன்றி முடக்கியுள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் (Windsor) மற்றும் அமெரிக்காவின் டிட்ராயிட் (Detroit) நகரங்களை இணைக்கும் இப் பாலம், முழுமையாகக் கனேடிய வரி செலுத்துவோரின் $6.4 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டதாகும்.
இருப்பினும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்து, நாடாளுமன்றத்தின் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான நிலையான குழுவில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப முயன்றன.
இதன் போதே, ஆளுங்கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்களால், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த முன்மொழிவு முடக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிபந்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொள்கை அளவிலான ஒப்பந்தத்தின்படி, பாலத்திலிருந்து கிடைக்கும் நிகர வருவாயில் (Net Revenue) 50 சதவீதத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுடன் கனடா பகிர்ந்துகொள்ளவுள்ளது.
இருப்பினும், பாலத்தைக் கட்டுவதற்கு கனடா செய்த $6.4 பில்லியன் டொலர் கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை வருவாய் எதுவும் அமெரிக்காவுக்குப் பகிரப்படாது எனப் பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) முன்னர் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஒப்பந்த ஆவணங்களில் கடன் மறுசெலுத்தல் குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை என்பதும், ‘இயக்கச் செலவுகள்’ (Operating Costs) என்றால் என்னவென்று துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் வகையில், லிபரல் கட்சி உறுப்பினர்கள் பாலத்தின் பொருளாதார நன்மைகள் மற்றும் சர்வதேச வர்த்தக வளர்ச்சி குறித்து நீண்ட உரைகளை ஆற்றியதுடன், இறுதியாக எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆய்வை முடக்கினர்.
கனேடிய மக்களின் பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட திட்டத்தின் உண்மையான ஒப்பந்த விவரங்களை மத்திய அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


