இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில், தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய ‘யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம் – பண்பாடு – ஆளுமை’ என்னும் நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்றது.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துக் கொண்டார்.
கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீமான் சாய் முரளியும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஓய்வுபெற்ற பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இலங்கைத் தமிழியற் கழகத்தின் தலைவர் கலாநிதி க.இரகுபரன் நூல் வெளியீட்டுரையை வழங்கினார்.
நூலின் முதற் பிரதியை இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எஸ்.பரமராஜா பெற்றுக்கொண்டார்.
வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் மதிப்பீட்டுரையையும், தகைசால் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வாழ்த்துரையையும் வழங்கினார்.


