கோப் குழு என்று அழைப்பப்படும் பொது நல்வாழ்வு நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கைகளை அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவோ அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தெரிந்தெடுத்த வகையிலோ பயன்படுத்தக் கூடாது என, கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நடுநிலைமை, வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கோப் குழு முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சுயாதீன விசாரணைகளை
நடத்துவதற்குப் பதிலாக, தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துவதற்காகவே அதன் அறிக்கைகள் அண்மைக் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலமான கவலைகள் எழுந்துள்ளதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கோப் குழுவின் அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த முழுமையான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரோ அல்லது தகுதியுள்ள நீதிமன்றம் ஒன்றினால் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரோ, சம்பந்தப்பட்ட தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களையோ பகிரங்கமாகத் தண்டிப்பதற்கோ குற்றஞ்சாட்டுவதற்கோ அவ்வறிக்கையைப் பயன்படுத்தக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முறையான சட்ட நடைமுறைகள் (Due Process) மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற சட்டக் கோட்பாடு
(Presumption of innocence) ஆகியவை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.



