இந்தியாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அமைப்பான DCGI சந்தைப்படுத்தல் அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு டெங்கு நோயைத் தடுக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.டெங்கு வைரஸின் நான்கு வகைகளான DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்கும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
QDENGA தடுப்பூசி இரண்டு டோஸ்களாக வழங்கப்படும். முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு முன்பு ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், இந்த தடுப்பூசி உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு பாதிப்புகளை தடுப்பதில் சுமார் 80.2 சதவீத செயல்திறனையும், டெங்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதில் சுமார் 90.4 சதவீத செயல்திறனையும் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பெருமளவிலான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசி பொது சுகாதாரத் துறையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசியுடன் சேர்த்து ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், சுற்றுப்புற தூய்மையை பேணுதல் மற்றும் நீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து அவசியம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



