கியூபெக் மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியில் வீடற்ற மக்கள் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துத் தங்குவது மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து, அந்த நகர மேயர் புரூனோ மார்ஷண்ட் (Bruno Marchand) தெரிவித்த கருத்துக்கள், உள்ளூர் சமூக நல அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கியூபெக் சிட்டியின் மேயர் புரூனோ மார்ஷண்ட் பேசுகையில், வீடற்றவர்கள் நகரின் பொது இடங்களில் தற்காலிகக் கூடாரங்களை (Encampments) அமைத்துத் தங்குவதை, தங்களின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று, மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
கியூபெக் சிட்டிமேயர் மார்ஷண்டின் இந்த பொதுப்படையான விவரிப்பு, வீடற்ற மக்கள் மீது சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தப்பெண்ணங்களையும் (Prejudice), சமூகப் பிளவையும் மேலும் தீவிரப்படுத்தும் எனப் பல உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
முப்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ (RAIIQ), கியூபெக் சிட்டிமேயரின் நடத்தை குறித்து கண்டித்துள்ளது.
வீடற்ற மக்கள் ஏற்கனவே சமூகத்தில் கடுமையான அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு வருகின்ற நிலையில், ”அவர்கள் நினைத்ததைச் செய்ய விரும்புகிறார்கள்’ என, கியூபெக் சிட்டி மேயர் கூறுவது முற்றிலும் தவறானது என, ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ தெரிவித்துள்ளது.

