மொன்றியல் நகரக் காவல் துறையை உலுக்கியுள்ள கடுமையான இனவெறி மற்றும் வெறுப்புணர்வு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கியூபெக் சிட்டி காவல் துறையிலும் (Quebec City Police) நிலவும் ‘இனரீதியான விவரக்குறிப்பு’ நடைமுறையை அரசியல் தலைமைகள் உடனடியாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
கியூபெக் சிட்டியின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கூட்டமைப்புகள் இணைந்து, கியூபெக் சிட்டியின் மேயர் புருனோ மார்சாண்டிற்கு (Mayor Bruno Marchand) இவ்விடயம் தொடர்பில் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
மொன்றியல்-நார்ட் (Montréal-Nord) பகுதியின் 39-வது காவல் நிலையத்தில் பணிபுரியும் 16 பொலிஸ் அதிகாரிகள், கறுப்பின மற்றும் அரபு வம்சாவளி மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவெறிச் செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், கியூபெக் சிட்டியின் நிலைமையைச் சுட்டிக்காட்டியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மொன்றியலில் நிகழ்ந்த இத்தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவங்களில் இருந்து கியூபெக் சிட்டி காவல் துறையும் விதிவிலக்கல்ல என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கியூபெக் சிட்டி பிராந்தியத்தில் நிலவும் இனரீதியான பாகுபாடுகளைக் கண்டறிந்து அளவிடுவதற்காக ஒரு ‘சுயாதீனப் புலனாய்வு விசாரணைக்கு’ (Independent Investigation) கியூபெக் சிட்டி மேயர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கியூபெக் சிட்டியில் வாழும் சிறுபான்மையின மக்கள் காவல் துறையினரால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பல ஆண்டுகளாகப் புகார்கள் அளிக்கப்பட்டும், அவை அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்படுவதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சில அதிகாரிகள் தங்கள் உடைகளில் பயன்படுத்தும் சின்னங்கள் குறித்தும் இந்தக் கடிதத்தில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. காவல் துறையினரைக் குறிக்கும் நீல நிறக் கோடு அடங்கிய ‘தின் ப்ளூ லைன்’ சின்னம், பல இடங்களில் தீவிர வலதுசாரி மற்றும் இனவாதக் குழுக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”மொன்றியல் உட்படப் பல நகரங்களின் காவல் துறைகள் தங்களின் உத்தியோகபூர்வ நடுநிலைமை கடமைக்கு மதிப்பளித்து இந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள அதேவேளை, கியூபெக் சிட்டியில் இதனை இன்னும் அனுமதித்து வருவது ஒரு மிகப்பெரிய அரசியல் தவறு” என, அக்கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முக்கியக் கடிதத்தில் ‘லிக் டெஸ் துரவத் எட் டெஸ் லிபெர்டெஸ்’ (Ligue des droits et libertés) அமைப்பின் கியூபெக் சிட்டி பிரிவு, இனவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை அமைப்பு (CLAR) மற்றும் பல்வேறு சமூகக் குழுக்களின் கூட்டமைப்பான RÉPAC 03-12 ஆகியவற்றின் பிரதிநிதிகள், அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


