கியூபெக் மாகாணத்தை வட அமெரிக்க கண்டத்தின் முதன்மை மின்சார வாகன (EV) பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மாகாண அரசு மேற்கொண்டு வரும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான உத்தேச திட்டங்கள் பெரும் நிதி அபாயங்களை (Financial risks) கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண கணக்காய்வாளர் நாயகம் கைலெய்ன் லெக்லெர்க் (Guylaine Leclerc) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் சட்டமன்றத்தில் (National Assembly) அவர் சமர்ப்பித்துள்ள தணிக்கை அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார இலாப-நட்ட ஆய்வுகள் இன்றி, அவசரமாகப் பொதுமக்களின் வரிப்பணம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளதாக, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கியூபெக் மாகாண கணக்காய்வாளர் கைலெய்ன் லெக்லெர்க் தனது அறிக்கையில், ‘இன்வெஸ்ட்மென்ட் கியூபெக்’ நிருவாகத்தின் செயல்பாடுகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வணிக ரகசியம் (Commercial confidentiality) என்ற போர்வையைக் காட்டி, பல முக்கிய கோப்புகளைத் தணிக்கையாளர் குழுவிடம் பகிர்ந்து கொள்ள ‘இன்வெஸ்ட்மென்ட் கியூபெக்’ நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, கியூபெக் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி அரசுக்கு எதிராகக் கடுமையானப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.


