கியூபெக் (Quebec) மாகாணத்திற்கு உட்பட்ட மொந்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் ரக்கூன் (Raccoons) விலங்குகளிடையே வெறிநாய்க்கடி நோய் (Raccoon Rabies) பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த அபாயகரமான வைரஸ் தொற்று மொண்ட்ரியலின் தெற்குப் பகுதி (South Shore) நகராட்சிகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், காட்டுவிலங்குகளைப் பிடித்து, தடுப்பூசி செலுத்தி, மீண்டும் காட்டில் விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான இரண்டு வார கால அவசரத் தடுப்பூசி இயக்கத்தை, கியூபெக் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
கியூபெக் மாகாணச் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சின் அதிகாரிகள், மொண்ட்ரியலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள 32 நகராட்சிகளை உள்ளடக்கிய சுமார் 750 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இந்த விசேட தடுப்பூசிப் பணியை முன்னெடுத்துள்ளனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிராந்தியத்தில் வாழும் 800 முதல் 1,000 ரக்கூன்கள், கீரிகள் (Skunks) மற்றும் நரிகளைப் (Foxes) பிரத்யேகக் கூண்டுகள் மூலம் உயிருடன் பிடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரக்கூன்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபட்சமாக உயர்த்தி, இயற்கைச் சூழலில் இந்த நோய் பரவும் சங்கிலித் தொடரை (Chains of disease transmission) ஆரம்பத்திலேயே துண்டிப்பதே தமது நோக்கம் என, கியூபெக் வெறிநாய்க்கடி நோய் முகாமைத்துவத் திட்டத்தின் தலைவர் உயிரியலாளர் மரியான் காக்னே (Marianne Gagné) தெரிவித்துள்ளார்.


