நாட்டின் 31ஆவது ஆளுநர் நாயகமாக (Governor General), புகழ்பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், மனித உரிமைகள் பாதுகாவலருமான லூயிஸ் ஆர்பர் (Louise Arbour – 79) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற செனட் கட்டடத்தில் (Senate of Canada Building) பாரம்பரிய முறைப்படி, அதேநேரம் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு மிகவும் அர்த்தமுள்ள வகையில் இந்த வைபவம் அரங்கேறியுள்ளது.
இதன் மூலம், கனடாவின் அரச தலைவராகவும் (Head of State), கனடிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் (Commander-in-Chief) அவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாட்டின் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் (Chief Justice Richard Wagner) மூன்று முக்கிய உத்தியோகபூர்வப் பதவியேற்புப் பிரமாணங்களை வாசிக்க, லூயிஸ் ஆர்பர் அவற்றைக் கூறி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதாக உறுதியளித்தார்.
அவர் செனட் சபையின் பிரதான அரியணையில் (Senate Throne) அமர்ந்த அந்த வரலாற்றுப் பூர்வமான தருணத்தில், நாடாளுமன்றக் குன்றுப்பகுதியில் (Parliament Hill) இருந்து, மரியாதை பூர்வமாக 21 பீரங்கி வேட்டுகள் முழக்கப்பட்டன.
அதேநேரம், அமைதிக்கோபுரத்தில் (Peace Tower) கவர்னர் ஜெனரலுக்கான உத்தியோகபூர்வக் கொடி ஏற்றப்பட்டதோடு, இராணுவத்தின் மத்தியப் பிரிவினரால் ‘காட் சேவ் த கிங்’ (God Save the King) தேசிய வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது பூர்வீகக்குடி (Indigenous) ஆளுநர் நாயகமாகப் பதவியேற்று, தனது ஐந்து ஆண்டுக்காலத் சேவையை நிறைவு செய்துள்ள மேரி சைமனின் (Mary Simon) இடத்திற்கே, லூயிஸ் ஆர்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் நாயகமாகப் பதவியேற்ற பின், நாட்டு மக்களுக்குத் தனது முதலாவது உரையை ஆற்றிய லூயிஸ் ஆர்பர், கியூபெக் மற்றும் அல்பர்ட்டா மாகாணங்களின் அரசியல் ரீதியான தன்னாட்சிப் பிரிவினைவாத நகர்வுகளால் தேசிய ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் 1947-ஆம் ஆண்டு எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த லூயிஸ் ஆர்பர், சட்டத்துறையில் உலக அளவில் வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


