கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காகவும், குறிப்பிட்ட சில தரப்பினரை இலக்கு வைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் (Selective enforcement) அமல்படுத்தி வருவதாக, அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம் கலைஞர் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையிலான பாடல்கள் மற்றும் காட்சிகளை உள்ளடக்கிய காணொளிகளை டிக்டொக் (TikTok) சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று விசேட அறிக்கை ஒன்றினைக் கணொளி வாயிலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதகமில்லாத சாதாரணக் கலைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவறானது என, அந்த அறிக்கையில் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சட்டத்தை நிலைநாட்டும் போது அது அனைவருக்கும் பொதுவானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் எனவும் ஆனால், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சில சம்பவங்களுக்கு மட்டுமே அவசர அவசரமாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும், நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
ஒரு ராப் பாடலை உருவாக்கியதற்காக அல்லது சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பதிவிட்டதற்காக ஒரு இளம் கலைஞரைத் தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பது விந்தையானது என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பல்வேறு குற்றச்செயல்கள்
பகிரங்கமாக அரங்கேறி வரும் நிலையில், அங்கெல்லாம் இத்தகைய கடுமையான சட்டங்களை ஏவத் தயங்கும் அரசாங்கம், வடக்கில் உள்ள ஒரு கலைஞருக்கு எதிராக மட்டும் உடனடியாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது ஏன்? என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதுடைய இளைஞர் கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்ட ஒரு கலைஞர் ஆவார். இவர் தனது கணினியைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட அமைப்பின்
சின்னங்கள் மற்றும் பழைய பாடல்களைக் கொண்டு நவீன பாணியிலான இசைக் கோர்ப்புகளை உருவாக்கி டிக்டொக்கில் பதிவேற்றியுள்ளதாக, இலங்கையின் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
