இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்கள் மற்றும் குரல்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி,
இணைய வழியில் பாரிய நிதி மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக உயரிய பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களின் நம்பகத்தன்மையைப் பயன்படுத்தி, போலியான முதலீட்டுத் திட்டங்களை முன்னிறுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த Deepfake எனப்படும் போலி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (Sri Lanka CERT) இலங்கை மக்களுக்கு இது குறித்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முதலீட்டுத் திட்டங்கள் (Government Investment Schemes) என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் மோசடி காணொளிகள் குறித்துப் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, இலங்கை கணினி அவசரத் தயார்நிலைப் பிரிவு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உண்மையான காட்சிகளை எடுத்து, அவற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் குரல்களை ”ஏஐ குரல் குளோனிங்
(AI Voice Cloning)” தொழில்நுட்பம் மூலம் ஆங்கிலத்தில் மாற்றி, இப்போலி விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் இலங்கையின் தலைவர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் தோன்றி அதிக லாபம் தரும் முதலீடுகள் என்று எவற்றையேனும் குறிப்பிட்டால், அதனை உடனடியாக நம்ப வேண்டாம்
என்று, இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
