பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியை பெற்று , தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் , கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுதல் நடாத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளை பெற்று தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
தடயறி (GPS) ஊடாக அவர்களின் படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள் எடுத்துள்ள போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரான் ஊடாக கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
