நாட்டின் நன்னீர் இறால் தொழில்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக வருமானம் தரும் ஒரு வணிகத்துறையாக மாற்றுவதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின் கீழ், பாரம்பரிய முறைகளை மாற்றி, தீவின் பிரதான நீர்த்தேக்கங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய தொழில்நுட்ப வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இறால் குஞ்சுகளை (Post-larvae) நேரடியாக நீர்த்தேக்கங்களில் விடுவிப்பதற்குப் பதிலாக, “கூடு முறை” (Cage system) மூலம் ஒருமாத காலம் பூர்வாங்க வளர்ச்சியைப் பெறச்செய்து விடுவிப்பதால், இதற்கு முன்னர் ஒரு கிலோ இறாலைப் பெறுவதற்கு 300-400 குஞ்சுகள் தேவைப்பட்ட போதிலும், தற்போது அது 100 வளர்ந்த இறால் குஞ்சுகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது முதல் கட்டமாக நாட்டின் ஐந்து இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. கிரித்தலே வாவி, அநுராதபுர மாவட்டத்தின் இரண்டு குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் இரண்டு குளங்களை மையமாகக் கொண்டு இச்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மற்றும் அக்கராயன் குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புது முறிப்பு குளத்தில் கூடு மூலம் வளர்க்கப்பட்ட இறால் குஞ்சுகள் குளத்தில் இன்று விடப்பட்டன.தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வாழ் உயிரினவளர்ப்பாளர் அஜித் சிறிகுமார கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன்,நீர் உயிரினச்செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் ம.மதுசன்,மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
