கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள் ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எஸ். கிரியகலா, மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கை.பிரகாஸ், பூநகரி, பளை, கண்டாவளை, கரைச்சி கால்நடை வைத்தியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பண்ணையாளர் உள்ளிட்டோர்.கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கால்நடைகள் மேய விடுவதற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களை பெற்றுக்கொடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் 49ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சுற்றறிக்கை காணப்படுகின்ற நிலையில் அதனை பெற்றுக்கொள்வதற்கு கால்நடை பண்ணையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரணைமடுக்குளம் வான் பாய்கின்ற பகுதியில் நீர்ப்பாசன எல்லை காணியை இருபக்கமும் நூறு மீற்றர் அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரைக்கு ஒதுக்குமாறும் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் பிடித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
