கனடா வருவாய் முகவரகத்துக்கு சுமார் 1 மில்லியன் டொலர் நிலுவை வரியைச் செலுத்துமாறு தற்போதைய லாவல் மாநகர நிர்வாகத்திற்கு, ஒட்டாவா மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லாவல் (Laval) மாநகர சபையின் முன்னாள் மேயர் கில்ஸ் வைலன்கோர்ட் (Gilles Vaillancourt) கையாடல் செய்ததாகக் கூறப்படும் பணம்தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேயர் கில்ஸ் வைலன்கோர்ட் தனது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் கைப்பற்றியிருந்த, சுவிஸ் வங்கிக் கணக்கில் மறைத்து வைத்திருந்த 7 மில்லியன் டொலர் பொதுப் பணத்தை கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்ற உடன்படிக்கையின் கீழ், லாவல் மாநகர சபையிடம் ஒப்படைத்திருந்தார்.
அந்தப் பணம் தற்போது மீண்டும் மாநகர சபையின் வசம் உள்ளதால், அதற்குரிய மத்திய வருமான வரியையும் அதற்கான வட்டியையும் லாவல் மாநகரமே செலுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தி வருகின்றது.
இந்த நடவடிக்கை கனேடிய அரசியல் மற்றும் நகராட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு லாவல் மாநகரத்தின் தற்போதைய மேயர் ஸ்டீபன் போயர் (Stéphane Boyer) தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட லாவல் நகர மக்களிடமிருந்தே மீண்டும் வரி வசூலிக்க மத்திய அரசு முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், முன்னாள் மேயரிடமிருந்து மீட்கப்பட்ட 7 மில்லியன் டொலர் நிதியானது, லாவல் நகரின் மிகவும் பின்தங்கிய ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வருவாய் முகவரகத்தின் இந்த வரிக்கோரிக்கைக்கு எதிராக, லாவல் மாநகர சபை உத்தியோகபூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளது.
