உட்கட்சி பிரச்சினை நீதிமன்றம் வரைக்கும் சென்ற நிலையில் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தவறான ஆட்சேபனை ஒன்றைத் தாக்கல் செய்தமைக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் கண்டன எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றம் குறித்து இருவரும் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை (ரூ.10,000) வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சுமந்திரனால் தான் கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக இராசேந்திரம் தாக்கல் செய்த வழக்கானது தொடர்ந்து நடத்திச் செல்லவும் நீதிமன்றம் சம்மதித்துள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது, தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாகச் செயற்பட்டதாகக் கூறி, பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரத்தை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் இடைநிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அடிப்படையற்ற இந்த நடவடிக்கையை எதிர்த்து, எந்த மத்தியக்குழு தீர்மானமும் இன்றித் தன்னைத் தானே நீக்கியதாக இராசேந்திரம் யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள கண்டனம் கீழ் வருமாறு
இந்த வழக்கில் தோன்றிய சிவஞானமும் சுமந்திரனும், வழக்கு தாக்கல் செய்ததே தவறு என எழுத்துமூல ஆட்சேபனை தாக்கல் செய்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று (12.05.2026) பிறப்பித்த கட்டளையில், தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளரின் ஆட்சேபனைகள் முற்றிலும் தவறானவை எனத் தள்ளுபடி செய்தது.
மேலும், அவர்கள் எழுப்பிய தவறான ஆட்சேபனைக்காக வழக்குச் செலவாக தலா ரூ.10,000 வழங்க வேண்டுமென உத்தரவிட்டதோடு, முதல் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் அனுமதி அளித்தது. இதன்படி குறித்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
