வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும் இடத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போது அது ஏற்கனவே உயிரிழந்திருந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குப்பை மேடுகளில் உணவு தேடி வரும் வன யானைகள் பல்வேறு அபாயங்களை எதிர்கொள்வதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய தீர்வுகள் அவசியம் என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
