யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ஏகமனதாக உறுதி செய்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று திரும்பிய 18 வயதுடைய மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கும்படி, சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை இலங்கையின் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதேவேளை, இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த இரு பிரதிவாதிகளின் தண்டனை நீக்கப்பட்டுள்ளது.
