மொன்றியல் நகரின் சாலைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், அவற்றைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) புதிய அவசரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
நகரெங்கும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் சாலைக் குழிகளை (Potholes) திருத்துவதற்கு, 6 மில்லியன் டொலர் மேலதிக நிதியை அவர் ஒதுக்கியுள்ளார்.
அண்மையில், மொன்றியல் மேயரின் சொந்த வாகனம் நோட்ரே-டேம் (Notre-Dame) வீதியில் இருந்த பெரும் பள்ளங்களில் சிக்கி, இரண்டு டயர்கள் வெடிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, “சாலைகளின் நிலைமை மிகமோசமாக உள்ளது” என்று ஒப்புக்கொண்ட மொன்றியல் மேயர், உடனடித் தீர்வுகளைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
சாலைகளைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் 2027-ஆம் ஆண்டுக்குள் இரண்டு பிரத்தியேக மையங்கள் அமைக்கப்படும் எனவும் இதில் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
