தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தையிட்டி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பாதல் குழப்பம் ஏற்பட்டதால், காணி அளவீடு இடம்பெறாது போனது. மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இந்த விகாரையானது, எமது ஆட்சிகாலத்தில் கட்டபட்டதில்லை. காணிகளை மீள கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். எமது அரசாங்கத்தில் காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.
காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.
பவாணி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்.
வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.
விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.
