மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை(25) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு இலங்கையில் சிவில் சமூகத்தினரிடையே தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (PSA) வரைவு தொடர்பாகவும் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சட்டங்கள் மற்றும் தற்போது வரைபில் இருக்கின்ற PSA தொடர்பாகவும் தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தொழிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), மற்றும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள PSTB மற்றும் ஏற்கனவே முன் மொழியப் பட்டCTA (Counter Terrorism Bill) மற்றும் ATB (Anti Terrorism Bill )ஆகியவற்றின் தாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் இச் சட்டத்தினால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வளவாளர் சட்டத்தரணி அல்வில் அமல்ராஜ் கலந்து கொண்டு சட்ட நுணுக்கங்கள் மற்றும் அதன் சவால்கள் மற்றும் அதில் இருக்கும் ஏனைய விடயங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
மெசிடோ (MSEDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில், UNOPS திட்டத்தின் விருத்தி கூட்டமைப்புகளின் (Viruththi) நிதி அனுசரணையில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் உள் வாங்கப்பட்டனர்.
