நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கங்களான நிலைக்குழுக்களை (Standing Committees) தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பான லிபரல் கட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளில் (Standing Orders) மாற்றங்களைச் செய்யப்போவதாக அரச தரப்புப் பிரதம கொறடா ஸ்டீவன் மெக்கின்னன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் கட்சி மாறியதன் மூலம், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அரசு 174 இடங்களுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது சமநிலையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பெரும்பாலான குழுக்களில் லிபரல் கட்சிக்கு 7 இடங்களும், பழமைவாதக் கட்சிக்கு (Conservative) 4 இடங்களும், பிளாக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்படவுள்ளன.
