கடந்த 2022 ஆம் ஆண்டில் வாகன விபத்தொன்றில் தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்ட வழக்கில், இன்று (17) நீதிமன்றம் பிரதிவாதியை குற்றமற்றவர் என விடுதலை செய்ததை அடுத்து, பெரும் அதிருப்தியில் ஈடுபட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை எனக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
2022 ஒக்டோபர் 12 ஆம் திகதி, மார்க்கம் வீதி – எல்சன் வீதி சந்திப்பில் டிரக்கும் காரும் மோதிக்கொண்டதில் இந்த சோக விபத்து ஏற்பட்டது. இதில், நெலுக்சனா புவனேந்திரன், பதீரனா புவனேந்திரன் (குழந்தைகள்) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் தாயாரான ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மில்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி அனுபவமிக்கவர் எனவும், அசாதாரண காலநிலை சூழ்நிலையே விபத்துக்கு காரணம் எனவும் நீதிமன்றம் கூறியதுடன், குற்றவாளியை குற்றமற்றவர் என விடுதலை செய்து, எந்தவித தண்டனையும் வழங்காமல் உத்தரவிட்டது.
இதற்கு முன்னர், மூவரின் உயிரிழப்புக்கும் காரணமான வாகன சாரதிக்கு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை ஒரே விபத்தில் இழந்த புவனேந்திரன், இன்று தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்பி, பொதுமக்களை தன்னுடன் இணையுமாறு சமூக ஊடகங்கள் வாயிலாக அழைத்திருந்தார். அவரது அழைப்பிற்கிணங்கவே பெருந்திரளானோர் நீதிமன்றத்தில் திரண்டிருந்தனர். எனினும், எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், கனடாவில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்துகின்றனர்.
