நாடெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் குறித்து கொழும்பு தேசிய மருத்துவமனை அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு 36 பாரதூரமான வீதி விபத்துக்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்துக்கள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏப்ரல் 13 ஆம் திகதி 19 வீதி விபத்துக்களும் ஏப்ரல் 14 (புத்தாண்டு தினம்) ஆம் திகதி 17 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
விபத்துக்களுக்கு மேலதிகமாக, இதே காலப்பகுதியில் பல்வேறு குழு மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் ஏப்ரல் 13 ஆம் திகதி 14 மோதல்களும், நேற்றைய தினம் மற்றும் இன்றைய (15) முற்பகல் வரையான காலப்பகுதியில் 21 மோதல்களும் பதிவாகியுள்ளன.
சுகாதாரப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, புத்தாண்டு வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சாதாரண வாரங்களை விட 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் கொண்டாட்டங்களின் போது மிகுந்த அவதானத்துடனும், நிதானத்துடனும் செயற்படுமாறு மருத்துவமனை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
