மொன்றியல் நகரத்தில் மூன்று மெட்ரோ நிலைய நுழைவாயில்களைக் காலவரையறையின்றி மூடுவதாக, மொன்றியல் மாநகர போக்குவரத்துச் சபையான STM அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் “விரும்பத்தகாத நடத்தைகளை”க் காரணங்காட்டியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெக்கில் (McGill) நிலையத்தின் டி மெய்சொன்னூவ் (de Maisonneuve) வீதி நுழைவாயில், ஸ்கொயர்-விக்டோரியா-OACI நிலையத்தின் பெல்மாண்ட் (Belmont) வீதி நுழைவாயில், டி காஸ்டெல்னோ (De Castelnau) நிலையத்தின் வடக்குப் பக்க நுழைவாயில் முதலானவையே தற்போது மூடப்பட்டுள்ளன.
மெட்ரோ நிலையங்களின் சில பகுதிகளில் அசுத்தம், தேவையற்ற நடமாட்டம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக STM தெரிவித்துள்ளது.
நிலையங்களின் பரப்பளவைக் குறைப்பதன் மூலம், துப்பரவுப் பணியாளர்களையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் சிறப்பாகச் செயல்பட வைக்க முடியும் என, மொன்றியல் மாநகர போக்குவரத்துச் சபையான STM நிர்வாகம் கருதுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மெட்ரோ நிலையங்களில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டை விட, 15 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
