கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்டகால விருப்பம், பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மீது அவர் கொண்டுள்ள மரியாதையினால் கைவிடப்பட்டதாக, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபல அரச குடும்ப ஆய்வாளர் ராபர்ட் ஹார்ட்மேன் எழுதி வெளியிட்டுள்ள ‘எலிசபெத் II: இன் பிரைவேட். இன் பப்ளிக்’ (Elizabeth II: In Private. In Public) என்ற புத்தகத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் புளோரிடாவில் ஹார்ட்மேனுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த உரையாடலை, இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை ஒரு நேர்க்கோடாக வரையப்பட்டுள்ளதை விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், பெரும்பாலான கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்கு மிக அருகிலேயே வசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய அரசியல்வாதிகளைக் கடுமையாகச் சாடிய டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney) கிண்டலாக ‘கவர்னர் கார்னி’ என்றே அழைத்து வந்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவை இணைக்க முயன்றால் அது “கனடாவின் மன்னரான சார்ள்ஸை அதிருப்தி அடையச் செய்யும் என்று ஹார்ட்மேன் சுட்டிக்காட்டியதாகவும் அதன் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்படைந்ததாகவும் அந்த நூல் குறிப்பிடுகின்றது.
கனடா இன்னும் மன்னர் சார்ள்ஸை தனது நாட்டின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறிந்த பிறகு, மன்னரின் அதிகாரத்தை மீறி தன்னால் எதனையும் செய்ய முடியாது என்பதை ட்ரம்ப் மறைமுகமாக ஒப்புக்கொண்டதாக, ஹார்ட்மேன் தமது புத்தகத்தில் எழுதியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.


