திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 43 இலட்சம் ரூபாவை வட்ஸ் அப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண் ஒருவரை திருகோணமலை காவல்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் நீதிமன்றம் விடுத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பணத்தை இழந்த நபர்,திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைந்துள்ள விசே குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
இதன்படி நடந்த விசாரணகளை அடுத்து கொழும்பை சேர்ந்த இரு பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டமை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.
அதன்படி குறித்த பெண்கள் இருவரையும் திருகோணமலைக்கு வருமாறு காவல்துறையினர் அழைத்துள்ளனர்.அதனை அடுத்து இன்று திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு சமூகமளித்த ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
