எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துவிட்டு திடீரென்று எரிபொருளுக்கு விலை அதிகரித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அதே வேலைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொள்வதாகவும், தற்போதைய எரிபொருள் விலை ஏற்றத்தினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார் .
இந்நிலையில் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருக்க நிலையிலும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றால் அங்கு சட்டவிரோத மீன்பிடியாளர்கள் மற்றும் இந்திய உள்ளூர் அடிமடி (rollers) மீன் பிடியாளர்களினால் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளமையால் மீன் இன்மை காரணமாக வெறும் கையோடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில் செய்வதற்காக அனுமதி பெற்றுவிட்டு வடமராட்சி பகுதியில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
