கியூபெக் மாகாணத்தில் அநாதரவாகவும், கைவிடப்பட்ட நிலையிலும் வாழும் “பூனைகளின்” (Community Cats) நலன்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் திகதி சனிக்கிழமை மாகாணத்தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறவுள்ளது.
மொன்றியல், கியூபெக் சிட்டி, ஷெர்ப்ரூக், மொன்ட்-லோரியர் மற்றும் ஈல்ஸ்-டி-லா-மடலீன் ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் இந்த நடைப்பயணம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கியூபெக் அரசாங்கத்திடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாகாணத்தழுவிய கையெழுத்துச் சேர்க்கை (Petition) நடைபெற்று வருகிறது.
விலங்கு நல ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நடைப்பயணம் மற்றும் கையெழுத்துப் போராட்டம் கியூபெக் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
