தென் கியூபெக் (Quebec) பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை முதல் மிகவும் அபாயகரமான பனிமழை (Freezing Rain) பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த இயற்கைச் சீற்றத்தினால் கியூபெக் மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 24 மணிநேரம் வரை நீடிக்கக்கூடிய இந்த பனிப்பொழிவின் போது, 20 முதல் 30 மில்லிமீட்டர் வரை தடிமனான பனிப்படலம் (Ice accumulation) உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மொண்ட்ரியல், கியூபெக் சிட்டி, லாரன்டியன்ஸ் மற்றும் அவுட்டாவாய்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.
மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் மீது அதிகப்படியான பனி படிவதால், அவை முறிந்து விழுந்து நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சாலைகள் மற்றும் நடைபாதைகள் கண்ணாடியைப் போல வழுக்கக்கூடிய பனிப்படலமாக மாறும் என்பதால், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்படலாம் என்பதால், மக்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
