பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமானது.
தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறையை மதியம் 2.00 மணியளவில் வந்தடைந்தது.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து மீண்டும் 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் என்பதுடன் இரு வழிக்கட்டணமாக 28,500 இலங்கை ரூபாய்கள் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
