மொன்றியலின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ‘ரிவியர்-டெ-பிரேரி–பாயிண்ட்-ஓ-ட்ரெம்பிள்’ பகுதி மக்கள், போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தங்களுக்குப் போதுமான பொதுப் போக்குவரத்து மற்றும் கல்வி வசதிகளை, அரசு வழங்கவில்லை எனக் கூறியே, அப்பகுதி மக்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பல தசாப்தங்களாகத் தங்களது பகுதி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தப் பகுதியில், முறையான இரயில் அல்லது விரைவுப் பேருந்து வசதிகள் இல்லாதமை, மிகப்பெரிய குறையாக உள்ளது.
கிழக்குப் பகுதிக்குத் திட்டமிடப்பட்டிருந்த ‘REM de l’Est’ இரயில் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, தங்களுக்கு ஒரு முறையான மாற்றுத் திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இங்கிருந்து மொன்றியால் நகரின் மையப்பகுதிக்குச் செல்ல ஒருவருக்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகிறது எனத் தெரிவித்த அவர்கள், பல பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளதால், முதியவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
