யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட வைத்திய நிபுணர் பேராசிரியர் சு.ரவிராஜ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளர்களுக்கான பொதுச்சுடரை ஈழநாதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிவபாலன் ஏற்றி வைக்க, தலைமை உரையை யாழ்.ஊடக அமையத்தின் போசகர் ரட்ணம் தயாபரன் ஆற்றினார்.
“ஊடக அறிக்கையிடலின் சமகால போக்கு” எனும் தலைப்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும், “புதிய ஊடக கொள்கைகள்” எனும் தலைப்பில் போராசியர் எஸ்.ரகுராமும், “ஊடகத்துறை எதிர்நோக்கும் சட்டரீதியான சாவால்” சட்டத்தரணி வி.மணிவண்ணனும், “சட்ட வைத்திய துறைசார் ஊடக அறிக்கையிடல்” எனும் தலைப்பில் வைத்திய அதிகாரி சி.சிவரூபனும் உரையாற்றினர்.
சிறப்புரையை யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சு.ரவிராஜ் நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்வில், ஊடகத்துறைக்கு பணியாற்றியவர்கள் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
நிமலராஜன் ஞாபகார்த்த விருதை ஊடகவியலாளர் ஐயன் கிருஷ்ணனும், மாமனிதர் தராகி சிவராம் ஞாபகார்த்த விருதை அமரர் சிவசுப்பிரமணியம் பாரதி சார்பில் அவரது சகோதரி பெற்றுக்கொண்டனர்.
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஞாபகார்த்த விருதை சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவசுப்பிரமணியம் சிவபாலனும், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஞாபகார்த்த விருதை நவரட்ணம் கபில்நாத்தும் பெற்றுக்கொண்டனர்.
யாழ்.ஊடக அமையத்தின் சிறப்பு விருது மூன்று தசாப்தகால ஊடகத்துறையில் பணியாற்றிவருபவரும், யாழ்.ஊடக அமையத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வக்குமாருக்கு வழங்கப்பட்டது.

