வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தோடு வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றதோடு, விபத்துக்களும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்நிலமையினை கருத்தில் கொண்டு மாநகரசபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கொட்டகைகள் மற்றும் பொருட்களை அகற்றும் செயற்பாட்டில் மாநகரசபை வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், உட்பட்ட உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

