நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) காய்ச்சல் வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாகப் பரவி வருவதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் (Health Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, புதிய வகை H3N2 வைரஸ் சிறுவர்களைக் கடுமையாகப் பாதித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 6,799 பேருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய வாரத்தை விட 20.2 சதவீதம் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காய்ச்சலின் தீவிரம் காரணமாக, ஒட்டாவா பகுதியில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் இந்த வாரம் உயிரிழந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒட்டாவாவில் இத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருக்கின்றமை குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் நகரப்பகுதிகளில் உள்ள சிறுவர் மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் திணறி வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது.
5 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக முழுமையாகச் செயல்படாவிட்டாலும், அது உயிருக்கு ஆபத்தான நிலையைத் (Severe Illness) தடுக்கும் என மருத்துவர்கள்
உறுதியளிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்கள் நெருங்குவதால், மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
