வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த 5500 லீட்டர் தரமற்ற மற்றும் பயன்படுத்த முடியாத திரவ உரம் அழிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 17.12.2024 அன்று வவுனியா இரட்டைப்பெரிய குளம் பகுதியில் குறித்த திரவ உரம் கைப்பற்றப்பட்டது.
இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேசிய உரச் செயலகம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, ஒரு வருடம் கழித்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த திரவ உரத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த திரவ உரம் வவுனியாவின் பம்பைமடு பகுதியில் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத்சந்ர, மேலதிக மாவட்டச் செயலாளர் நா.கமலதாசன், தேசிய உரச் செயலக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

