அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரியுள்ளார்.
இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் பாராளுமன்றத்தை விரைவாகக் கூட்ட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறம்பொடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரியுள்ளோம். பாராளுமன்ற அமர்வு ஏற்பாடு செய்ததன் பின்னர் ஒவ்வொரு பிரதேசங்களிலுமுள்ள பிரச்சினைகளை தெளிவாக கலந்துரையாட முடியும்.
தற்போது பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களை பாடசாலைகளிலிருந்து வெளியேறுமாறு அநேகமான இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் செல்வதற்கு வதிவிடம் இல்லாமல் போயுள்ளது. அது நீதியும் இல்லை. ஆனால், பாடசாலைகளையும் உரிய நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். இதுதொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் தேவைகளுக்காக அவர்களுடன் இணைந்து எதிர்த்தரப்பாகிய நாங்களும் பணியாற்றி வருகிறோம். மண்சரிவுக்குள்ளான பிரதேசங்களில் நிர்க்கதியாகியுள்ள மக்களை விரைந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணங்களும் நிச்சயம் வழங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றாது என்று நம்புகிறோம். பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவோம்”என்று குறிப்பிட்டுள்ளார்


