வெள்ளப் பேரிடரின் பின்னர் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெள்ளப் பேரிடரின் காரணமாக வவுனியாவின் பல்வேறு வீதிகள், வடிகால்களில் குப்பைக் கூலங்கள், போத்தல்கள், பொலித்தீன்கள், பிளாஸாரிக் பொருட்கள், ரயர்கள், உள்ளிட்டவை தேங்கியும் படிந்தும் காணப்படுகின்றன.
இதன் காரணமாக பெய்து வருகின்ற மழையினால் வெள்ளநீர் தேங்கி நின்று டெங்கு, மலேரியா நுளம்பு பெருகின்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் சுத்தமற்றதாகவும் காணப்படுகின்றது.
குறித்த விசேட வேலை திட்டத்தின் கீழ் வீதிகளையும் வடிகால்களையும் துப்புரவு செய்கின்ற பணி வவுனியா நகரம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார பிரிவினர், சுகாதார பரிசோதகர்கள், வவுனியா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிசார், சமுதாய பொலிஸ் குழுவினர், வவுனியா பல்கலைக்கழகத்தினர், மலேரியா தடை இயக்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வேலை திட்டங்களை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

