வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலர் உணவுக்காக இதுவரை பணத்தை வங்கியில் வைப்பிலிடும் முறைக்கு மேலதிகமாக தேவைக்கேற்ப உலர் உணவுப் பொருட்களைப் பொதியாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலாளர்கள் தமது பகுதிகளில் நிலவும் விசேட நிலைமைகளின் அடிப்படையில் பொருத்தமான குழுவொன்றின் மூலம் முடிவுகளை எடுக்கத் தேவையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


