தாய்வான் கடல் பகுதியில் சீனா போர் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்த பார்த்தால், அதை எதிர்கொள்ள ஜப்பானும் படைகளை நிறுத்தும்’ என அந்நாட்டு பிரதமர் சனே தகைய்ச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாய்வான் பிராந்தியத்தில் ஒருவேளை ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலைமை உண்டானால், ஜப்பான் தற்காப்புக்காக படைகளை அனுப்புமா?’ என பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜப்பான் பிரதமர் தகைய்ச்சி,
‘இது ஒரு கற்பனை நிலைமை. இருந்தாலும் தாய்வான் கடல் பகுதியில் சீனா போர்க் கப்பல்களை நிறுத்துவது, இன்னொரு நாட்டின் பலவீனத்தை பயன்படுத்துவது போன்றவை நடந்தால், அது ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
‘அந்த அச்சுறுத்தல் தாக்குதலாக மாறினால், தற்காப்புக்காக படைகளை நிறுத்தும் உரிமையை நாம் பயன்படுத்துவோம்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் கூறிய கருத்து, தங்கள் இறையாண்மைக்கு எதிரானதாக சீனா கருதுகிறது.
சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் சன் வெய்டாங், சீனாவுக்கான ஜப்பான் துாதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதற்கிடையே, சீன மக்கள் யாரும் எதிர்வரும் நாட்களில் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம். தாய்வான் பற்றிய ஜப்பானின் ஆபத்தான கருத்துக்களால் சீனர்களுக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என, ஜப்பானுக்கான சீன துாதரகம் அறிவித்துள்ளது.
