யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளி ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடலில் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த துரைராசா நியூட்டன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த கடற்தொழிலாளி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் , தனது மனைவிக்கு தொலைபேசி ஊடாக தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி கடற்தொழில் சமாசத்திற்கு அறிவித்தததை அடுத்து, கரையில் இருந்து கடற்தொழிலாளர்கள் சிலர் கடலுக்குள் சென்று குறித்த கடற்தொழிலாளியை மீட்டு கரை திரும்பினர்.
அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
