வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டு திட்டத்திற்கு செல்லும் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதம் அடைவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று கவனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள கருங்கல்குவாரி ஒன்றிலிருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சென்று வருவதனால் சிறிய வீதியாக உள்ள குறித்த வீதி தற்போது சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் மாற்றம் அடைந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியும் அப்பகுதி மக்கள் இதன் காரணமாக விபத்துகளுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமந்தை வேப்பங்குளம், விளாத்திக்குளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வீதியை ஊடறுத்து செல்லும் புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவையின்மை மற்றும் புகையிரதம் பெறுகின்ற போது சமிக்ஞைகள் இல்லை எனவும் இதன்போது தெரிவித்திருந்ததுடன் அதனை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியதோடு இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் ஒரு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.
அங்கு வருகை தந்த ஓமந்தை பொலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களோடு கலந்துரையாடியதுடன் பிரதேச சபை தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கற்குவாரியின் உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதாக தெரிவித்திருந்தனர்.
இதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்குச் சென்று கல்குவாரியை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
