காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன், 30 வயதுடைய போதை வியாபபரியான இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஜ.பி. ரத்நாயக்கவின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதைப்பொருள் வியாபாரி சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளும் போதை பொருள் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய இளைஞர் எனவும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
